கால்கள் நடந்து அயர்ந்து அமர்ந்த இடத்தில் முளைத்த சில அறிமுகங்களுடன் அண்ணாந்து பார்த்த முழுநிலா இன்னும் காய்ந்து கொண்டிருக்கிறது என் மனதில்,
தீர்மானிக்கப்படாத தலைப்புகள் தாங்கிய சம்பாஷணைகளுக்கு மௌன சாட்சியாக விடியும் வரை காத்திருந்த பழக்கத்தில்.
Sunday, May 29, 2016
முழுநிலா
Wednesday, February 10, 2016
ஒரு பாட்டு... ஒரு பயணம்...
This is my attempt to write lyrics for a song. While I'm fleshing out the musical components, here's the lyrics that I thought should share on my blog.
பல்லவி:
ஒரு நினைவோடு எனை கோர்த்து இசை செய்தேன் மனதுக்குள்ளே
கனவுகள் யாவும் அதை தேடி பலவித பிம்பம் வளர்க்கிறதே
முகங்களும் கூட விரைந்தெனை பார்த்து கதைகளை கூறத் தொடங்கியதே
உறவென இல்லை மறப்பதும் இல்லை சில வரி சேர்த்து விலகியதே
சரணம் 1:
என் காதில் கேட்கும் ஓசையா?
பின்னாலே ஈர்க்கும் ஆசையா?
வேகம் குறைக்கும் நேசமா?
பறக்கத் துடிக்கும் மேகமா?
இன்னும் இன்னும் கொஞ்சம் கொஞ்சம்
வரிகள் எழுதி முடிக்கிறேன்
காற்றில் மிதக்கும் பொன் மேகமாய்
சுழன்று சுழன்று திரிகிறேன்
சரணம் 2:
சேர்க்கும் அடிகள் பயணமா?
விடுக்கும் பழக்கம் தோன்றுமா?
கலைந்த நிலையில் மயக்கமா?
மற்றொரு கனவின் தொடக்கமா?
மீண்டும் மீண்டும் தட்ட தட்ட
கதவு மெல்ல திறக்குமே
வானம் கொஞ்சம் மண்ணில் வந்து
வழியைக் காட்டிக் கொடுக்குமே
Sunday, February 7, 2016
தராசு
வரையறைகள், சிறைப் பிடித்து சுயத்தை புதைக்கும் கட்டுகளாக இன்றி
நேசத்தை, ஒருங்கியக்கத்தை, வளர்க்கும் திட்டங்களாக மாறக் காத்திருக்கிறேன்
பெருவாரியாக ஒப்புக்கொள்ளப் பட்ட இயல்பு நிலை நியாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதல்ல
ஆரோக்கிய தளத்தில் மெல்லிய இசையோடு தனக்கென ஒரு நெறியோடு வாழ்ந்துவிட துடிக்கும் இதயங்கள் அதை அறியும்
இப்படி அரைக் கிறுக்காக ஊருக்கு ஒவ்வாத பிராணிகளாய் காட்சியளிக்கும் நம்மில் சிலர்
காத்திருப்பதென்னவோ, கலையை ரசிக்கும், நேர்மையை மதிக்கும் உள்ளுணர்வு கொண்ட தராசுகளுக்காகத்தான்.
Monday, July 6, 2015
நம்பிக்கை
களையாத நம்பிக்கையை கலைக்காக வைத்திருப்பாய்
ஓட்டங்கள் பிடிக்காமல் ஓய்வதில்லை என்றிருப்பாய்
பிரியாத உணர்வுக்கு பிடித்த சாயம் பூசியிருப்பாய்
படியாதது ஏதுமில்லை படிப்படியாய் உயர்ந்திருப்பாய்
Monday, May 18, 2015
கேள்வி
கனவான கவிதை கறிக்கு உதவாதாம்
கண்கள் பேசும் உவமை ஓய்ந்து களைக்குமாம்
இன்னும் கணக்குப் போட்டு மிச்சம் பிடித்து மனைகள் சேர்க்கும் வரை உயிர்த்திருப்பேன்.
கனவும் கண்களும் காத்திருக்குமா?
மௌனத் திரை
யாருமறியா கூட்டுக்குள் ஒளிந்திருக்கும் பேயை
மௌனத் திரை போட்டு மறைக்க நினைக்கும் பேதை
இறுக்க மூடிய கண்களுக்குள் வழி தொலைத்த காலை
வெளிர் முகத்தில் உதிரம் பாய்ச்ச மறுக்கும் மாயை
Monday, March 16, 2015
விந்தை - March 11, 2015
என்ன விந்தை?
கேட்டது கிடைக்கிறது.
இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்
இன்னும் கண்கள் குளமாகின்றன
இன்னும் பறந்துவிடக் காத்திருக்கிறேன்
இன்னும் நெஞ்சம் பிசைந்து துடிக்கிறது
இன்னும் களைத்துப் போகிறேன்
இன்னும் பார்வை இருண்டுப் போகிறது
இதில் கேட்பதை விடுத்து இருப்பதை ரசிப்பதா?
இல்லை ரசிப்பதை விடுத்து இருப்பதை விடுப்பதா?